பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி: போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது


பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி: போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 10:45 PM GMT (Updated: 14 Nov 2018 4:50 PM GMT)

ஆத்தூர் அருகே பாலியல் தொல்லையால் மனம் உடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்

ஆத்தூர், 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சார்வாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மகன் முரளி (வயது 24), கார் டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அந்த மாணவி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் அப்பகுதி பொதுமக்கள் முரளியை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் பிடிபட்ட முரளி மற்றும் பாதிக்கப்பட்ட அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்த இன்ஸ்பெக்டர் கற்பகம், போக்சோ சட்டத்தின் கீழ் கார் டிரைவர் முரளியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story