தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள விளைநிலம் மீட்பு


தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள விளைநிலம் மீட்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 10:52 PM GMT (Updated: 14 Nov 2018 10:52 PM GMT)

குத்தகை பாக்கியை விவசாயி செலுத்தாததால் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோவிலுக்கு சொந்தமான ரூ.1¼ கோடி மதிப்புள்ள விளைநிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் 88 கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை எல்லாம் குத்தகைக்கு விடப்பட்டு மாதந்தோறும் குத்தகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட கரந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள காடிக்காலூர் பகுதியில் உள்ளது. இந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, அவற்றின் மூலம் கோவிலுக்கு வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது. கரந்தை இமாத்திகொத்தன் தெருவை சேர்ந்த ரேணுகா, கொடிக்காலூர் கிராமம் ஆவுசாகிப்தோட்டம் பகுதியில் 5 பிரிவுகளாக உள்ள 6.39 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலத்திற்குரிய குத்தகை பணத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரேணுகா செலுத்தவில்லை. குத்தகை பணத்தை செலுத்த வேண்டும் என்று அரண்மனை தேவஸ்தானம் மூலம் பலமுறை நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் பணத்தை செலுத்த அவர் முன்வரவில்லை. இதனால் தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தனித்துணை தாசில்தார் பாலசந்திரன் விசாரணை செய்து குத்தகை பாக்கியை செலுத்தவில்லை என்றால், நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி நேற்று அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர் சுரேஷ், தலைமை எழுத்தர் சங்கர், வருவாய் நீதிமன்ற அமலாக்க ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், நில அளவையர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கொடிக்காலூருக்கு சென்று ரேணுகா 5 பிரிவுகளாக விவசாயம் செய்து வந்த 6.36 ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்த நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தை சுற்றிலும் சிவப்பு கொடி ஊன்றப்பட்டது. இந்த நிலத்தில் உரிய அனுமதியின்றி பிரவேசிப்பவர்கள் மீது போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் அடங்கிய விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டன.

இது குறித்து அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன் கூறும்போது, அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்பவர்களில் சிலர் குத்தகை பாக்கி செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு எதிராக வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு வழக்கில் வந்த தீர்ப்பின்படி நிலத்தை மீட்டுள்ளோம்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரேணுகா, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் குத்தகை பாக்கி வைத்துள்ளார். இதனால் அவர் சாகுபடி செய்து வந்த நிலத்தை அவரிடம் இருந்து மீட்டுள்ளோம். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். திருவையாறு, பாபநாசம் பகுதியில் குத்தகை பாக்கியை செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து நிலத்தை மீட்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

தற்போது மீட்கப்பட்ட நிலத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக வளர்ந்து காணப்படுகிறது. இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரானதும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story