அன்னிய தொழில் முதலீட்டில் மராட்டியம் பின்தங்கி விட்டது : அசோக் சவான் குற்றச்சாட்டு


அன்னிய தொழில் முதலீட்டில் மராட்டியம் பின்தங்கி விட்டது : அசோக் சவான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:10 PM GMT (Updated: 14 Nov 2018 11:10 PM GMT)

அன்னிய தொழில் முதலீட்டில் மராட்டியம் முதலிடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு பின்தங்கி விட்டதாக அசோக் சவான் குற்றம் சாட்டினார்.

மும்பை,

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்டு உள்ள தகவலின் படி தற்போதைய பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சியில் அன்னிய தொழில் முதலீடு சரிந்து உள்ளது. அதாவது, மராட்டியம் முதலிடத்தில் இருந்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் செப்டம்பர் வரை கர்நாடகம் ரூ.83 ஆயிரத்து 236 கோடி அன்னிய முதலீட்டை ஈட்டி உள்ளது. குஜராத் ரூ.59 ஆயிரத்து 89 கோடியும், மராட்டியம் வெறும் ரூ.46 ஆயிரத்து 428 கோடியும் அன்னிய முதலீட்டை பெற்று உள்ளது.

இதேபோல 2016, 2017-ம் ஆண்டுகளிலும் மராட்டியத்துக்கு மூன்றாம் இடமே கிடைத்து உள்ளது. திட்டமிடப்பட்டு உள்ள அன்னிய முதலீ்ட்டிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

எங்களது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது பெறப்பட்ட அன்னிய முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு தான் தற்போது ஈட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு மாநில தொழில் துறை மந்திரி சுபாஷ் தேசாய் பதிலளித்து கூறியதாவது:-

மராட்டியம் 11 தொழில் திட்டங்களை அமல்படுத்திய நிலையில், கர்நாடகம் 3 தொழில் திட்டங்களை மட்டும் அமல்படுத்தி உள்ளது.

கர்நாடகம் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ள அன்னிய முதலீட்டை கணக்கில் கொண்டு அசோக் சவான் இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டு உள்ளார். திட்டமிடப்பட்டு உள்ள முதலீடுகள் எப்போதும் உண்மையான முதலீடாக ஏற்றுக்கொள்ளப்படாது.

அன்னிய முதலீட்டில் மராட்டியம் எப்போதுமே முதலிடத்தில் தான் உள்ளது. அதுமட்டுமின்றி அன்னிய முதலீ்ட்டை உரிய முறையில் மராட்டியம் அமல்படுத்தி வருவதாகவும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. முதல்-மந்திரி பதவி வகித்த ஒருவர் உண்மையை அறியாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது நகைப்புக்குரியது. மராட்டியத்தின் புகழுக்கு அவர் களங்கத்தை ஏற்படுத்துவது ஏன்?

இவ்வாறு மந்திரி சுபாஷ் தேசாய் கூறினார்.

Next Story