மணல் குவாரி அமைப்பதை கைவிடாவிட்டால் முதல்-அமைச்சர் வீடு முற்றுகை விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை


மணல் குவாரி அமைப்பதை கைவிடாவிட்டால் முதல்-அமைச்சர் வீடு முற்றுகை விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Nov 2018 10:45 PM GMT (Updated: 15 Nov 2018 7:10 PM GMT)

மணல் குவாரி அமைப்பதை கைவிடாவிட்டால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாமரைக்குளம்,

அரியலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஆற்றுப்படுகை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். எனவே மணல் குவாரிகளை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு முன்பு விவசாயிகளை ஒன்று திரட்டி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது. செந்துறை ஆண்டிமடம், அரியலூர் வட்டங்களில் முந்திரி விவசாயம் நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்கு முந்திரி கன்றுகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர்காப்பீடு

கொள்ளிடத்தின் குறுக்கே பொன்னாற்று தலைப்பில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பாலைகள் பிடித்தம் செய்த நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை ஆகியவற்றுக்கு விலை அறிவிக்க வேண்டும். உளுந்திற்கும் பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழக ஏரி ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story