தாராபுரத்தில் சாக்குமூட்டையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது


தாராபுரத்தில் சாக்குமூட்டையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 PM GMT (Updated: 15 Nov 2018 8:31 PM GMT)

தாராபுரத்தில் சாக்குமூட்டையில் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அண்ணியை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியதாக வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை துண்டித்ததால் தீர்த்துக்கட்டியதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் பகுதியில் உள்ள உப்பாறு பாலத்திற்கு கீழ் கடந்த மாதம் 25-ந் தேதி சாக்குமூட்டையில் பிணம் இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த சாக்குமூட்டையில் இருந்த உடலை வெளியில் எடுத்தபோது அது பெண்ணின் உடல் என்றும், அந்த பெண்ணுக்கு 40 வயது இருக்கலாம் என்றும், அந்த பெண் கொலை செய்யப்பட்டு 4 அல்லது 5 நாட்கள் இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மர்ம ஆசாமிகள் அந்த பெண்ணை வேறு பகுதியில் கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டிய பின்னர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து உப்பாற்றுக்குள் வீசிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடிபுதூரை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (வயது 45) என தெரியவந்தது. இவரை கொலை செய்ததாக அவருடைய சகோதரியின் கணவனான வேலுச்சாமி (43) மற்றும் குமரேசன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட வேலுச்சாமி போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கவுந்தப்பாடிபுதூர் ஆகும். கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வரும் நான் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளேன். இதனால் தினமும் கவுந்தப்பாடிபுதூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள ஆயக்குடிக்கு சென்று அங்கு கொய்யா பழங்களை மொத்தமாக வாங்கி வந்து, விற்பனை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி வசந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். எனது வீட்டிலேயே எனது மனைவியின் அக்காள் முத்துலட்சுமி, அவருடைய கணவர் முருகன் மற்றும் அவர்களுடைய 2 மகள்கள் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களது 2 குடும்பமும் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சாலையோரம் கொய்யாப்பழம் வியாபாரம் செய்கிறோம்.

கூட்டுக்குடும்பமாக வசித்துவருவதால் எனக்கும், முத்துலட்சுமிக்கும் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையில் முத்துலட்சுமியின் முதல் மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், 2 -வது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு பிறகு முத்துலட்சுமி என்னுடன் உள்ள உறவை துண்டித்துக்கொள்ள முடிவு செய்தார். இதனால் எனக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

முத்துலட்சுமிக்கு என்னை பிடிக்காமல்போனதால் வேறுயாருடனோ கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு என்னை வெறுக்கிறாள் என நினைத்தேன். இதனால் அவள்மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி நானும், எனது தங்கையின் மகன் குமரேசன் என்கிற தினகரன் (24) என்பவருடன் மினிவேனில் ஈரோடு சென்றோம். அங்கு கொய்யாப்பழம் விற்றுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை வா ஊருக்கு போகலாம் என்று வலுக்கட்டாயமாக அழைத்து அவளை வேனில் ஏற்றிக்கொண்டு கவுந்தப்பாடிபுதூர் சென்றேன். வேனை குமரேசன் ஓட்டினார்.

வேனில் பின்னால் நானும், முத்துலட்சுமியும் அமர்ந்து இருந்தோம். அப்போது எனக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், துண்டால் முத்துலட்சுமியின் கழுத்தை இறுக்கினேன். அதில் அவள் இறந்துபோனாள். பின்னர் முத்துலட்சுமியின் உடலை பெரிய சாக்குமூட்டையில் கட்டி, அதை வேனுக்குள் வைத்து, அந்த சாக்குமூடை மீது காலியாக இருந்த பழக்கூடைகளை அடுக்கி வைத்துவிட்டோம். பின்னர் அன்று இரவு வழக்கம்போல் கொய்யா பழங்கள் வாங்க, ஆயக்குடி செல்வதாக அனைவரிடம் கூறிவிட்டு, நாங்கள் இருவரும் வேனை எடுத்துக்கொண்டு ஆயக்குடி சென்றோம். பின்னர் திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாறு பாலம் வந்ததும், வேனில் மூடையாக கட்டி வைத்து இருந்த உடலை எடுத்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் வீசிவிட்டு சென்று விட்டோம்.

இவ்வாறு வேலுச்சாமி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதைடுத்து போலீசார், இவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

Next Story