மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரை கண்டித்து ‘டாஸ்மாக்’ அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்


மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரை கண்டித்து ‘டாஸ்மாக்’ அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 PM GMT (Updated: 15 Nov 2018 9:25 PM GMT)

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரை கண்டித்து திருச்சியில் ‘டாஸ்மாக்’ அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் குதித்து கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக திரண்டு வந்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் தங்களை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் உயர் அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் தரக்குறைவாக பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கூறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டியு.சி, சி.ஐ.டி.யு, அரசு பணியாளர் சங்கம், எஸ்.சி எஸ்.டி பணியாளர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் ஆணையர் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்யும்போது கடைப்பணியாளர்களை தரக்குறைவாகவும், கடுமையாகவும் திட்டியுள்ளார். தேவதானத்தில் உள்ள ஒரு கடை விற்பனையாளரை தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி உள்ளார். மதுக்கூட (பார்) உரிமையாளர்கள் மூலம் போலீசார் டாஸ்மாக் விற்பனையாளரையும், மேற்பார்வையாளரையும் அதிக விலைக்கு பாட்டில் விற்றதாக கூறி பொய் புகார் பெற்றுக்கொண்டு தேவையில்லாமல் விசாரணை என்ற பெயரில் தரக்குறைவாக பேசுகிறார்கள். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத பட்சத்தில் எப்.ஐ.ஆர். போட்டே தீர வேண்டும், நீங்களே கேசுக்கு ஆள் கொடுங் கள் என கூறி துன்புறுத்துகிறார்கள்.

மேலும் கடந்த மாதம் தாயனூர் ஒத்தக்கடை டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை முடித்து விட்டு திரும்பியபோது மிளகாய் பொடி தூவி அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 80 வழிப்பறி செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அந்த 2 பணியாளர்களையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து நீங்களே பணத்தை எடுத்ததாக ஒத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள்.

போலீசாரின் இத்தகையை அத்துமீறல் நடவடிக்கைகளால் டாஸ்மாக் பணியாளர்கள் நிம்மதியாக வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தினமும் பணி முடிந்து நல்லபடியாக வீடு போய் சேர முடியுமா என்ற நிலை இருப்பதால் நாங்கள் பயம் இல்லாமல் நிம்மதியாக வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பால்பாண்டியன், நிர்வாகிகள் காமராஜ், ஜெய்கணேஷ், திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர்லால், செயலாளர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் வசூல் ஆகும் தொகையை இரவில் பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும்போது வழிப்பறி திருடர்களால் தாக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இப்படி கொள்ளையடிக்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்களே தங்களது கையில் இருந்து கட்டவேண்டும் என போலீசார் மிரட்டி நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையில் இருந்து பணத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்னையில் உள்ளது போல் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாக வந்து பணத்தை பெற்று செல்லவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story