தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு ரூ.14½ லட்சம் மதிப்பில் வாகனம் கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு ரூ.14½ லட்சம் மதிப்பில் வாகனம் கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 5:37 PM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு ரூ.14½ லட்சம் மதிப்பிலான வாகனத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தென்மண்டல குழாய் வழிப்பாதை சார்பில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ், ரூ.14½ லட்சம் மதிப்பிலான வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு வாகனத்தினை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கண்விழி பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும்.

கண் தானம் செய்யும் விருப்பமுள்ளவர்களின் இல்லத்திற்கு நவீன மருத்துவ கருவிகளுடன் வாகனத்தில் சென்று, அவர்களின் உறவினர்களிடம் முறையான கையொப்பம் பெற்று, பின்னர் கண்கள் பாதுகாப்பாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும். கண் விழி பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று கண் பொருத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க உதவியாக இருக்கும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கண் தானம் செய்யும் விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் வசந்தி, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட் துணை பொது மேலாளர் கவுதமன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story