ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா? நீர்நிலைகளை ஆய்வு செய்ய மீட்பு குழுவை நியமித்தது மதுரை ஐகோர்ட்டு


ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா? நீர்நிலைகளை ஆய்வு செய்ய மீட்பு குழுவை நியமித்தது மதுரை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 16 Nov 2018 10:30 PM GMT (Updated: 16 Nov 2018 10:12 PM GMT)

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய நீர்நிலை மீட்பு குழுவை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. அந்த குழுவுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை வண்டியூர் கண்மாய் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும். எனவே நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.“ என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், நீர்நிலைகளில் உள்ள இடங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என சார்–பதிவாளர்களுக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் சென்னை ஐகோர்ட்டில் இருந்து விசாரித்தனர்.

விசாரணை முடிவில், “மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதை ஆய்வு செய்ய நீர்நிலைகள் மீட்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் பெரியார், வைகை பாசனத்துக்கு உட்பட்ட கண்மாய்கள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் கோர்ட்டுக்கு உதவியாக மூத்த வக்கீல் வீராகதிரவன் இருந்து மீட்பு குழுவினருடன் சென்று ஆய்வில் பங்கேற்க வேண்டும். இந்த குழு நாளை (அதாவது இன்று) மதுரை வண்டியூர் கண்மாயில் அகற்றப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

இதேபோல திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். இந்த குழுவுக்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர்கள் செய்து தர வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 26–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story