புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்பாதைகளை சீரமைக்க 560 பணியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்பாதைகளை சீரமைக்க 560 பணியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 7:30 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்பாதைகளை சீரமைக்க 560 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாவட்டத்தில் புயல் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மின்சாரத்தினால் எவ்வித உயிரிழப்பும் இல்லை. புயலால் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மேலும் மரங்களும் மின்கம்பத்தின் மீது சாய்ந்ததால் மின்கம்பங்கள் பாதிப்படைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 185 மின்பாதைகள் உள்ளன. இதில் 170 மின்பாதைகள் புயலினால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

மின்சாரத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் படி இதனை சீரமைக்க பிற மாவட்டங்களிலிருந்து மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதன்படி மின்சாரத்துறையை சேர்ந்த முதன்மை பொறியாளர் தலைமையில் விருதுநகர், கோவையை சேர்ந்த 2 கண்காணிப்பு பொறியாளர்கள், 32 செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 560 பணியாளர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு இங்குள்ள பணியாளர்களுடன் சேர்ந்து மின்பாதகைகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நடவடிக்கை காரணமாக மணமேல்குடி, ஆவுடையார்கோவில், மீமிசல், கொடிக்குளம் ஆகிய பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறந்தாங்கி, பொன்னமராவதி, திருமயம் ஆகிய பகுதிகளுக்கு இன்றுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) மின்சாரம் வழங்கப்பட்டு விடும். இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான மின்சார வசதியை ஏற்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புயலினால் சாலைகளில் சாய்ந்துள்ள மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் திருச்சி, கரூர், திருவள்ளுர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா 3 செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் தலைமையில் 200 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு 5 பணியாளர்களுக்கு ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்்பார்வையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மரம் அறுக்கும் எந்திரம் 50-ம், ஜெனரேட்டர் 50-ம் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிப்பு அடைந்த 28 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் முழுவதுமாக சேதமடைந்த ஓட்டுவீடு மற்றும் கூரைவீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த ஓட்டு மற்றும் கூரைவீடுகளுக்கு தலா ரூ.4,100-ம் நிவாரணமாக வழங்கப்படும்.

மேலும் வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் புயலினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தை கஜா புயல் பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீட்டெடுக்கும் வகையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிக்கர், மாவட்ட கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் உடன் சென்றனர்.

Next Story