தர்மபுரியில் ‘பிரேக்’ பிடிக்காமல் ஓடிய லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு


தர்மபுரியில் ‘பிரேக்’ பிடிக்காமல் ஓடிய லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 7:31 PM GMT)

‘பிரேக்’ பிடிக்காமல் ஓடிய லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

தர்மபுரி, 

தர்மபுரி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை ஒரு சரக்கு லாரி அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பாரதிபுரத்தில் உள்ள பொது வினியோக திட்ட கிடங்கிற்கு புறப்பட்டது. இந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த டிரைவர் பழனி என்பவர் ஓட்டினார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே சென்றபோது ஒரு தனியார் பள்ளி பஸ் எதிரே உள்ள சாலையில் திரும்பியது. அப்போது அந்த பகுதியில் சென்ற லாரியில் திடீரென ‘பிரேக்’ பிடிக்கவில்லை. இதனால் தனியார் பள்ளி பஸ் மீது மோதாமல் இருக்க லாரியை வலதுபக்கமாக பக்கவாட்டில் டிரைவர் திருப்பினார். இதனால் சாலையின் மறுபுறத்திற்கு சென்ற அந்த லாரியை எதிரே வந்த வாகனங்கள் மீது மோதிவிடாத வகையில் அந்த லாரி டிரைவர் லாவகமாக ஓட்டி சென்று அரசு மருத்துவக்கல்லூரியின் முன்பக்க தடுப்பு சுவர் மீது லாரியை மோதி நிறுத்தினார். அவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story