புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 426 பணியாளர்கள் மீட்பு பணி அமைச்சர் காமராஜ் தகவல்


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 426 பணியாளர்கள் மீட்பு பணி அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2018 11:00 PM GMT (Updated: 17 Nov 2018 8:14 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 426 பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை அலுவலகத்தில் இருந்து நிவாரண முகாம்களுக்கு 43 தொற்றுநோய் தடுப்பு விரைவு மருத்துவ குழுக்களை அனுப்பி் வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு மருத்துவக்குழுக்களை அனுப்பி வைத்தார். இதில் எரிசக்தித்துறை அரசு முதன்மை செயலாளர் முகமது நிஜாமுதீன், சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரை கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர்அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘கஜா’ புயலின் தாக்கத்தினால் 6 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 205 நிவாரண மையங்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 251 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர்், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

‘கஜா’ புயலினால் 33 ஆயிரத்து 237 மரங்கள் சாய்ந்துள்ளன. இதில் 17 ஆயிரத்து 684 மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

7,200 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய சாலைகளில் விழுந்துள்ள மரங்கள், மின் கம்பங்கள் அகற்றப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் இயல்பு நிலை திரும்ப மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழையினால் தேங்கி உள்ள நீரை அகற்றுதல் மற்றும் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு 133 பொக்லின் எந்தி்ரங்களும், முறிந்து விழுந்துள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்காக 91 மின் வாள்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 624 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தினை சேர்ந்த வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 4966 பணியாளர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த 1,410 பணியாளர்களும், 50 நபர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஆக மொத்தம் 6 ஆயிரத்து 426 பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஒரு டாக்டர்், 2 செவிலியர்கள், ஒரு உதவியாளர்கள் அடங்கிய 43 மருத்துவக்குழுக்கள் தொற்று நோய் பரவாமல் தடுக்க மாவட்டத்தில் அனைத்து நிவாரண முகாம்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப் படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அரசு அனைத்து துரித நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story