‘கஜா’ புயலால் கொட்டித்தீர்த்த மழை: ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பும் வைகை அணை


‘கஜா’ புயலால் கொட்டித்தீர்த்த மழை: ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பும் வைகை அணை
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 8:34 PM GMT)

‘கஜா‘ புயல் காரணமாக கொட்டித்தீர்த்த மழையால் ஒரே ஆண்டில் 3-வது முறையாக வைகை அணை நிரம்பி வருகிறது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இதனையடுத்து மதுரை, மேலூர், திருமங்கலம் பகுதியின் இருபோக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே தொடர்மழை எதிரொலியாக, கடந்த மாதம் 20-ந்தேதி வைகை அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக முழுகொள்ளளவை எட்டியது. இதனையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் உள்ள கண்மாய்களில் நீரை தேக்கும் வகையில் கடந்த வாரம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்தை காட்டிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மள, மளவென குறைந்தது. இந்தநிலையில் ‘கஜா‘ புயல் காரணமாக தேனி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால், வைகை அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 67.20 அடியாக உள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விரைவில் 3-வது முறையாக அணை தனது முழு கொள்ளளவான 69 அடியை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

வைகை அணை கட்டிய 1958-ம் ஆண்டு முதல், ஒரே ஆண்டில் 3-வது முறையாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டுவது இதுவே முறை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நிலையாக இருப்பதால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story