தொடர் மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 38 அடியாக உயர்வு


தொடர் மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 38 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 17 Nov 2018 11:15 PM GMT (Updated: 17 Nov 2018 10:25 PM GMT)

கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளது.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர், பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வந்து சேரும்.

கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

போதிய மழையின்றி கோமுகி அணை வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி விவசாய பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி குறைந்து 33 அடியாக இருந்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புயல் பாதை அமைந்துள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு நேற்று வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த தொடர் மழையால் 33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 38 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. கோமுகி அணை 38 அடியை எட்டியுள்ளதால் சம்பா சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story