மந்திரி சபை விரிவாக்கம் : காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை


மந்திரி சபை விரிவாக்கம் : காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 17 Nov 2018 11:12 PM GMT (Updated: 17 Nov 2018 11:12 PM GMT)

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காங்கிரசுக்கு 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் இருக்கிறது. அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த மந்திரி பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மேல்-சபையின் தற்காலிக தலைவரான பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில். காங்கிரஸ் கட்சி வசம் உள்ள 6 மந்திரி பதவிகளை நிரப்ப வலியுறுத்தி, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதுபோல, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் காலியாக உள்ள ஒரு மந்திரி பதவிக்கும் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் காலியாக இருந்த 3 நாடாளுமன்ற தொகுதிகள், 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்ததால், அதனை காரணம் காட்டி மந்திரிசபை விரிவாக்கத்தை காங்கிரஸ் மேலிடம் தள்ளிவைத்தது. தற்போது இடைத்தேர்தல் முடிந்து விட்டதால் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியானது. இதற்கிடையில், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் குடும்பத்தினரை சந்தித்து வேணுகோபால் ஆறுதல் கூறினார். அதன்பின்னர் நேற்று முன்தினம் இ்ரவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் திடீர் ஆலோசனை நடத்தினார்கள். ேநற்று முன்தினம் நள்ளிரவு வரை இந்த ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து சித்தராமையா, வேணுகோபால் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால் பெலகாவியில் வருகிற டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அந்த கூட்டத்தொடர் முடிந்த பின்பு மந்திரிசபையை விரிவாக்கம் செய்யலாம் என்றும், சிலர் கூட்டத்தொடருக்கு முன்பாகவே விரிவாக்கம் செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின்பு தான் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இதற்கிடையில், பெங்களூரு குமரகிருபா விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை நேற்று காலையில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Next Story