புயலால் பாதிக்கப்பட்டுள்ள 151 கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


புயலால் பாதிக்கப்பட்டுள்ள 151 கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 6:54 PM GMT)

நாகை மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள 151 கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 15-ந் தேதி கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து அனைத்து துறை அமைச்சர்கள், உயர் அலுவலர்களிடம் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள 7 கடலோர மாவட்டங்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர். பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.

கஜா புயல் கடந்த 15-ந் தேதி வேதாரண்யம் அருகே கரையை கடந்தபோது கடலோர கிராமங்களில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட 151 கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 210 பொக்லின் எந்திரங்களும், 203 ஜெனரேட்டர்களும், 213 மரம் அறுவை எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு 10,820 லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 620 லிட்டர் பாக்கெட் பால், 3 டன் பால் பவுடர் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 216 நியாயவிலைக் கடைகள் இன்று(நேற்று) முதல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 105 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 36 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

கடலோர கிராமங்களில் சுமார் 18 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை 7,958 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. 520 மின் மாற்றிகள் பழுதடைந்துள்ளன. அவற்றில் 111 மின்மாற்றிகள் சரிசெய்யப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சீரமைப்பு பணிகளுக்காக 5,375 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, உதயகுமார், பாரதி எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story