மானாமதுரையில் சுமை தூக்கும் தொழிலாளர் தங்கும் இடத்தில் தீ விபத்து


மானாமதுரையில் சுமை தூக்கும் தொழிலாளர் தங்கும் இடத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 18 Nov 2018 10:15 PM GMT (Updated: 18 Nov 2018 7:55 PM GMT)

மானாமதுரையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.

மானாமதுரை,

மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கும் இடம் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக இருந்து வரும் இந்த இடத்தில் தொழிலாளர்கள் தங்கள் வேலை முடிந்த பின்பு அவ்வப்போது ஓய்வெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இந்த இடத்தில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.

அதில் தங்கும் இடம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதைகுறித்து மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்புவீரர்கள் வருவதற்குள், தங்கும் இடம் முழுமையாக எரிந்து நாசமானது. மேலும் அங்கிருந்த பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகின.

இது குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி அங்கிருந்தவர்கள் கூறும் போது, தீவிபத்திற்கு மின் கசிவு காரணம் இல்லை. யாரோ மர்ம நபர்கள் இந்த வேலையை செய்துள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று பழைய பஸ் நிலையத்தில் உள்ள 12 கடைகள் தீயில் எரிந்து நாசமாயின என்றனர்.

இந்தநிலையில் அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகள் தீப்பிடித்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு, சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் தீவிபத்து பற்றி கேட்டனர். தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


Next Story