எக்ஸ்பிரஸ் ரெயிலில் கண்ணாடிகள் திருட்டு : கழிவறை குழாய்களும் உடைத்து சேதம்


எக்ஸ்பிரஸ் ரெயிலில் கண்ணாடிகள் திருட்டு : கழிவறை குழாய்களும் உடைத்து சேதம்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 9:48 PM GMT)

பிரகதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. மேலும் கழிவறை குழாய்களையும் பயணிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

மும்பை,

மும்பை-புனே இடையே பிரகதி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அந்த ரெயிலில் ரூ.60 லட்சம் செலவில் அதிநவீன வசதிகள் ஏற் படுத்தப்பட்டன. மேற்கத்திய கழிவறை, பெரிய அளவிலான பயணிகள் முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடி உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போய் உள்ளன.

கழிவறையில் உள்ள ஒருசில குழாய்களும் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் யாரோ சிலர்தான் இந்த வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

மும்பை - கோவா இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களிலேயே பயணிகள் அதன் இருக்கைகளை சேதப்படுத்தியதுடன், ஹெட்போன்களை திருடி சென்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பயணிகளின் வசதிக்காக பிரகதி விரைவு ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள பொருள்கள் திருட்டு போய் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் இந்த மாதிரியான செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ரெயில்வே சேவையில் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம். மேலும் திருட்டு போன பொருள்களின் மதிப்பு ரூ. 43 ஆயிரம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story