பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் விவசாயிகள் போர்வையில் கொள்ளையர்கள் நுழைந்து விட்டார்கள் - முதல்மந்திரி குமாரசாமி பேச்சு


பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் விவசாயிகள் போர்வையில் கொள்ளையர்கள் நுழைந்து விட்டார்கள் - முதல்மந்திரி குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:09 PM GMT (Updated: 18 Nov 2018 11:09 PM GMT)

விவசாயிகள் போர்வையில் கொள்ளையர்கள் நுழைந்து விட்டார்கள் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் விவசாயிகள் போர்வையில் கொள்ளையர்கள் நுழைந்து விட்டார்கள் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூருவில் நடைபெற்று வந்த விவசாய கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

மாநிலத்தில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து இன்னும் 6 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் கூட்டணி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். குமாரசாமி, விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று சொல்கிறார்கள். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு என்று சொல்ல வேண்டாம். இந்த அரசு 6½ கோடி மக்களுக்கான அரசு. விவசாயிகளுக்கான அரசு. விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. அதுதான் இந்த அரசின் குறிக்கோள்.

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நான் தயாராக உள்ளேன். விவசாயிகளுடன் கைகோர்த்து செயல்பட எனது தலைமையிலான அரசு தயாராக இருக்கிறது. மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் விவசாய கடன் தள்ளுபடி செய்யும் முடிவை எடுத்தேன். ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. விவசாய கடனை தள்ளுபடி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மராட்டியம், உத்தரபிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் உடனடியாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. நமது மாநிலத்தில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த உடனே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதற்குள் பெலகாவி சுவர்ணசவுதாவுக்குள் கரும்பு ஏற்றப்பட்ட லாரிகளுடன் உள்ளே நுழைந்துள்ளார்கள். சுவர்ணசவுதாவின் முன்பக்க கதவை கற்களால் உடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் அல்ல.

விவசாயிகள் ஒருபோதும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள். அமைதியாக போராட்டத்தில் ஈடுபடக்கூடியவர்கள். பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் விவசாயிகள் போர்வையில் கொள்ளையர்கள் புகுந்து விட்டார்கள். கொள்ளையர்கள் தான் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகை பெற்றுக் கொடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.


Next Story