கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை


கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை
x
தினத்தந்தி 19 Nov 2018 8:00 AM GMT (Updated: 19 Nov 2018 12:03 AM GMT)

இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப் படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், கமர்சியல் பைலட் (ஆண்-பெண்) போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கனை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:


ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) விண்ணப்பதாரர்கள் 1-7-1994 மற்றும் 30-6-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட் மற்றும் கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-1994 மற்றும் 30-6-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.

12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர் காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-11-2018-ந் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. 30-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story