பிளஸ்-2 மாணவியை கடத்தி இளம்வயது திருமணம்: பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை


பிளஸ்-2 மாணவியை கடத்தி இளம்வயது திருமணம்: பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 20 Nov 2018 11:15 PM GMT (Updated: 20 Nov 2018 9:30 PM GMT)

பிளஸ்-2 மாணவியை கடத்தி இளம்வயது திருமணம் செய்து வைத்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சேந்தமங்கலம் பேரூராட்சி 7-வது வார்டு காமராஜபுரத்தை சேர்ந்த மோகன்தாஸ் (வயது23) என்பவர் மாணவியை திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தல் சம்பவம் மற்றும் இளம்வயது திருமணத்திற்கு மோகன்தாசின் தந்தை ராஜேந்திரன் (50), தாயார் செல்வி (42) மற்றும் உறவினர்கள் கர்ணன் (45), சித்ரா என்கிற மேரி (24) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகன்தாஸ் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேர் மீதும் நாமக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மோகன்தாஸ், ராஜேந்திரன், செல்வி, கர்ணன் மற்றும் சித்ரா ஆகிய 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். இதேபோல் சித்ராவுக்கு ரூ.3 ஆயிரமும், மற்ற 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை விவரத்தை கேட்டதும் அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

Next Story