கருவில் குழந்தை ஊனம் என தெரிந்ததால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை இன்று வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்


கருவில் குழந்தை ஊனம் என தெரிந்ததால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை இன்று வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:30 PM GMT (Updated: 21 Nov 2018 6:10 PM GMT)

கருவில் இருந்த குழந்தை ஊனம் என தெரிந்ததால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று (வியாழக்கிழமை) வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது கருவில் இருந்த குழந்தை ஊனமாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சங்கீதா மனமுடைந்து காணப்பட்டார். இன்று (வியாழக்கிழமை) சங்கீதாவுக்கு வளைகாப்பு நடக்க இருந்தது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் சங்கீதாவை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சங்கீதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் இது தொடர்பாக உதவி கலெக்டர் சிவன் அருளும் விசாரணை நடத்தி வருகிறார். இன்று சங்கீதாவுக்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story