லாரியை எரித்து நாடகமாடி தேங்காய் எண்ணெயை கொள்ளையடித்த 9 பேர் கைது


லாரியை எரித்து நாடகமாடி தேங்காய் எண்ணெயை கொள்ளையடித்த 9 பேர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 6:25 PM GMT)

தொப்பூர் அருகே லாரியை எரித்து நாடகமாடி தேங்காய் எண்ணெயை கொள்ளையடித்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி, 

கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி கோவையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பப்பிரெட்டியூரை சேர்ந்த டிரைவர் சங்கரன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (28) என்பவர் உடனிருந்தார்.

மேச்சேரி அருகே வந்த போது லாரியில் இருந்த 75 சதவீத எண்ணெயை சங்கரன், விஜயகுமார் உள்ளிட்ட சிலர் கொள்ளையடித்து மாற்று லாரியில் எடுத்து சென்றனர். பின்னர் எண்ணெய் லோடு ஏற்றி சென்ற லாரியை தொப்பூர் அருகே எரித்து விபத்து நடந்ததாக நாடகமாடி அவர்கள் தப்பி விட்டனர்.

இது தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் லாரியை எரித்து நாடகமாடி தேங்காய் எண்ணெயை கொள்ளையடித்ததாக சங்கரன், விஜயகுமார், மாற்று லாரி டிரைவர் சேகர் (29), லாரியின் உரிமையாளர் பிரபு (30), சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த மோகன் (25), நல்லமுத்து (45), ராஜி (27), பப்பிரெட்டியூரை சேர்ந்த மோகன் (30), மூலக்காடு பகுதியை சேர்ந்த ராஜா (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய லாரி, அதில் இருந்த 65 பெட்டிகள் கொண்ட தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story