டெங்கு தடுப்பு நடவடிக்கை: ராஜபாளையத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு, ரூ.24 ஆயிரம் அபராதம் வசூல்


டெங்கு தடுப்பு நடவடிக்கை: ராஜபாளையத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு, ரூ.24 ஆயிரம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 21 Nov 2018 8:20 PM GMT)

ராஜபாளையம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சிவஞானம் முடுக்கி விட்டதோடு அதிரடி ஆய்வும் மேற்கொண்டார். அப்போது கொசுப் புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த நிறுவனங்களுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிவஞானம் ஆய்வு செய்தார். பணிகளை முடுக்கி விட்ட அவர் பல இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தினார். அப்போது சில நிறுவனத்தினர் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தது.

இதைதொடர்ந்து மலையடிப்பட்டி குறிஞ்சி நகரில் உள்ள பாண்டியன் பாட்டில் ஸ்டோர் நிர்வாகத்திற்கு ரூ.10 ஆயிரமும், கஸ்தூரிபாய் காலனியில் உள்ள மனோ பிளாஸ்டிக் நிர்வாகத்திற்கு ரூ.3ஆயிரமும், இ.எஸ்.ஐ. காலனியில் உள்ள இந்திரா பிரியதர்சினி தொடக்கப்பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கட்டிடத்திற்கு ரூ.1000மும், பாலாஜி திரையரங்க நிர்வாகத்திற்கு ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-

ராஜபாளையம் தாலுகாவில் பொதுசுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் 52 பேர் தலைமையில் சுமார் 400 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் அடங்கிய 7 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் டெங்கு கொசு பரவும் சூழ்நிலை உள்ளதா என்பதை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும், டெங்கு தடுப்பு சிறப்பு நடவடிக்கையின் போது, 3 புகை மருந்து அடிக்கும் வாகனங்கள் மூலமாகவும், 10 பல்ஸ் பாக் எந்திரங்கள் மூலமாகவும் புகை மருந்து அடிக்கப்பட்டது.

மேலும், நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 7 மருத்துவக்குழுக்கள் மருத்துவ முகாமில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரக்கடைகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

கல்வி நிறுவனங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் பள்ளி நிர்வாகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகள், ஊர்களில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பரவாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றும் கல்வி பயிலும் இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் தூய்மையாக வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் ராம்கணேஷ் (சிவகாசி), பழனிச்சாமி (விருதுநகர்), சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சரவணன், சிவகாசி தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story