வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தென்னை விவசாயிகள், கவர்னரிடம் கண்ணீர்


வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தென்னை விவசாயிகள், கவர்னரிடம் கண்ணீர்
x
தினத்தந்தி 22 Nov 2018 10:45 PM GMT (Updated: 22 Nov 2018 10:01 PM GMT)

வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டை பகுதி தென்னை விவசாயிகள், கவர்னரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் நேற்று முன்தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாகை வந்தார். நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட அவர் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

அங்கிருந்து மன்னார்குடி, மதுக்கூர் வழியாக காரில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வந்த அவர், புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது பட்டுக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் நிவாரண பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை அந்தோணியார் சர்ச் பள்ளி, நகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறினார்.

அப்போது பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதால் தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும், வீடுகளை சீரமைக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்த கவர்னர், மக்களின் தேவைகளை 7 முதல் 15 நாட்களுக்குள் நிறைவேற்றித்தர அறிவுறுத்தினார். மேலும் 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மக்களிடம் உறுதி அளித்தார்.

இதையடுத்து ஆலடிக்குமுளையில் குடிநீர் தொட்டியில் ஜெனரேட்டர் உதவியுடன் நீரேற்றும் பணியை பார்வையிட்டார். அங்கிருந்து காரில் புறப்பட்டு பாப்பாநாடு அருகே உள்ள ஆதிடநல்லவிஜயபுரத்துக்கு சென்று ரெங்கசாமி மகன் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை பார்வையிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள், கவர்னரிடம் கூறியதாவது:-

தென்னையை வைத்து தான் வங்கியில் கடன் வாங்கினோம். தென்னை வருவாய் மூலம் தான் எங்கள் குழந்தைகளை படிக்க வைத்தோம். புயல் காற்று எங்கள் தென்னை மரங்களை சாய்த்து விட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம். எனவே தென்னை விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்கள் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் மத்திய அரசு ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயலில் சேதமடைந்த ஒரு எக்டேர் நெற்பயிருக்கு ரூ.1 லட்சமும், தென்னை ஒரு எக்டேருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தென்னை விவசாயிகள் கண்ணீருடன் கூறினர்.

இதை கேட்டறிந்த கவர்னர், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கவர்னரின் கால்களில் விழுந்து கதறினர். அவர்களை சமாதானம் செய்த கவர்னர், காலில் விழக்கூடாது என அறிவுறுத்தினார். மேலும், உங்களுக்கு துணையாக இருப்போம். தைரியமாக இருங்கள். எல்லா தேவைகளும் செய்து கொடுப்போம் என கூறினார்.

இதைத்தொடர்ந்து பாளம்புத்தூரில் புயலால் சேதமடைந்து பின்னர் சீரமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்து விட்டு கவர்னர் காரில் தஞ்சை வழியாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். வழியில் புயலால் கீழே விழுந்த தென்னை மரங்களையும், சேதம் அடைந்த குடிசை வீடுகளையும் கவர்னர் பார்வையிட்டார். அதேபோல சோழகன்குடிகாடு கிராமத்தில் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல் சேத விவரங்கள் கணக்கெடுப்பு பணியையும் கவர்னர் ஆய்வு செய்தார்.

கவர்னருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறிய கோரிக்கைகளை கவர்னரின் கூடுதல் முதன்மை செயலாளர் ராஜகோபால், மொழிபெயர்த்து கவர்னரிடம் கூறினார். அதேபோல கவர்னர் கூறிய ஆறுதல் வார்த்தைகளையும் கூடுதல் முதன்மை செயலாளர், பாதிக்கப்பட்டவர்களிடம் கூறினார். 

Next Story