வேதாரண்யம் பகுதியில் 1,500 ஏக்கரில் மல்லிகை செடிகள் சேதம்


வேதாரண்யம் பகுதியில் 1,500 ஏக்கரில் மல்லிகை செடிகள் சேதம்
x
தினத்தந்தி 24 Nov 2018 11:00 PM GMT (Updated: 24 Nov 2018 10:34 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் 1,500 ஏக்கரில் மல்லிகை செடிகள் சேதமடைந்துள்ளன. 15 ஆண்டுகள் வாழ்வாதாரம் பின்னோக்கி சென்று விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் பகுதியில் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மல்லிகை செடிகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் அங்கு மீண்டும் எப்போது மல்லிகை மணம் வீசும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த பாதிப்பினால் 15 ஆண்டுகள் வாழ்வாதாரம் பின்னோக்கி சென்று விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ளது வேதாரண்யம். கடலோர பகுதியை கொண்ட இங்கு மீனவர்கள், உப்பள தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இங்கு மீன்பிடி தொழிலும், உப்பு தொழிலும் அதிக அளவில் நடந்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக நாகையில் அதிகமாக காணப்படுவது மல்லிகை பூ விவசாயம். ஒரு காலகட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் அதிக அளவில் புகையிலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. பின்னர் நாளடைவில் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதையடுத்து புகையிலை பயிரிட்ட விவசாயிகள் அனைவரும் மாற்று பயிர் சாகுபடியாக முல்லை மற்றும் மல்லிகை பூ சாகுபடிக்கு மாறினார்கள்.

இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மல்லிகை பூவிற்கு ‘சலங்கை மல்லிகை’ என்றும் பெயர் உண்டு. இங்கு உற்பத்தியாகும் மல்லிகை பூவுக்கு மனம் அதிகம். இந்த மல்லிகை பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

வேதாரண்யம் பகுதி தாலுகாவில் மறைஞாய நல்லூர், கருப்பம்புலம், குரவப்புலம், மருதூர், ஆயக்காரன்புலம், நெய்விளக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை பூக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் மட்டும் 1500 ஏக்கருக்கும் அதிகமாக மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மல்லிகை பூ செடிகள் பயிரிட்டு வருகிறார்கள் இது தவிர 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இதை நம்பி உள்ளனர். தினமும் பூக்கள் பறிப்பதால் இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து காணப்பட்டது.

இவ்வாறு பயிரிடப்பட்ட மல்லிகை பூ செடிகள் மற்றும் முல்லை பூ செடிகள் 10 முதல் 15 ஆண்டுகள் ஆனவையாகும்.

இந்த நிலையில் கஜா புயல் காரணமாக மல்லிகை பூ செடிகள் மற்றும் கொடிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த செடி, கொடிகளில் இருந்த அனைத்து இலைகளும் உதிர்ந்து காணப்படுகின்றன. மேலும் அதில் இருந்த பூக்கள், மொட்டுகள் அனைத்தும் உதிர்ந்து விட்டன. 1,500 ஏக்கரிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது.

இவ்வாறு பாதிப்படைந்த செடிகள் இனிமேல் முன்பு இருந்தது போல் பூக்கள் பூக்காது. குறைந்த அளவே பூக்கும் என்பதால் இந்த செடிகளை அகற்றிவிட்டு இனி புதிய செடிகளை நட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் 15 ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்று விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மல்லிகை பூக்கள் உற்பத்தி அடியோடு பாதிக்கப் பட்டுள்ளதால் வேதாரண்யம் பகுதியில் பூக்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதுகுறித்து மல்லிகை பூ விவசாயியான ரமேஷ் குமார் கூறியதாவது:-

வேதாரண்யம் பகுதி மல்லிகைப் பூ என்றாலே அதற்கு என்று ஒரு தனி மவுசு உண்டு. இந்த பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தோம். இந்த நிலையில் கஜா புயல் எங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. பூச்செடிகள் சேதம் அடைந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி புதிதாக செடிகளை நட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த பகுதிகளில் பெரும்பாலும் மல்லிகை பூ உற்பத்தி செய்யப்படுவதால் எங்கள் பகுதியில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் கூட காலையில் பூக்களை பறிக்க வேண்டும் என்பதற்காக காலையில் நிகழ்ச்சிகளை நடத்த மாட்டோம். திருமணமாக இருந்தாலும் சரி, இதர சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி மதியத்துக்கு பிறகு அல்லது மாலை நேரங்களில் தான் நடத்துவது வழக்கம். அரசு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் எங்களுடைய அழிவிற்கு ஈடாகாது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story