கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 168 பேர் கைது


கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 168 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2018 12:10 AM GMT (Updated: 25 Nov 2018 12:10 AM GMT)

கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்குவதை கண்டித்து நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் காலை 6 மணிக்கு வந்து சேரும். அதன்பிறகு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தி சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவது வழக்கம்.

தற்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இடநெருக்கடி இருப்பதாக கூறி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில்- கொச்சுவேளி இடையே பாசஞ்சர் ரெயிலாக இயக்க திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு வாரமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில்- கொச்சிவேளி இடையே பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். எனவே கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாக இயக்க கூடாது. கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று அறிவித்து இருந்தன.

இதற்கிடையே நேற்று காலை 8.30 மணியில் இருந்தே நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் முன் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோரும் அங்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று விடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நாகர்கோவில் துணை சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயில் 3-வது நடைமேடையில் வந்து நின்றதும், எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீஸ் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் அனந்தபுரி ரெயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.

இதில் தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் மகேஷ், கேட்சன், பெர்னார்டு, தில்லைச்செல்வம், ஹெலன்டேவிட்சன், பசலியான், சேக்தாவூது, எப்.எம்.ராஜரத்தினம், லாரன்ஸ், குட்டிராஜன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் நவீன்குமார், மகேஷ்லாசர், ராஜஜெகன், ஜெரால்டு கென்னடி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்தபடியே மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை கண்டித்தும், ரெயில்வே துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி உள்பட 168 பேரை கைது செய்தனர்.

கைது செய்தவர்களை போலீஸ் வாகனங்களில் ஏற்றி இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதில் சில நிமிடங்கள் தாமதமானது. மேலும் நாகர்கோவில் ரெயில் நிலையம் வழியாக செல்லும் பஸ் போக்குவரத்தும் நேற்றைய போராட்டத்தின் காரணமாக மாற்றி விடப்பட்டு இருந்தது. 10.30 மணிக்கு பிறகுதான் ரெயில் நிலையம் வழியாக பஸ் போக்குவரத்து சீரானது.

Next Story