உளுந்தூர்பேட்டை அருகே: முட்புதரில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை - போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே: முட்புதரில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Nov 2018 9:45 PM GMT (Updated: 25 Nov 2018 6:53 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே முட்புதரில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. இந்த குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 


உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சின்னகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த குழந்தையை பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினர். இருப்பினும் அந்த குழந்தை யாருடையது? என்பது தெரியவில்லை.

இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை இன்குபேட்டரில் வைத்து டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அந்த பச்சிளம் ஆண் குழந்தையை வீசிச்சென்றது யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் அந்த குழந்தையை முட்புதரில் வீசிச்சென்றாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முட்புதரில் பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story