டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: சுகாதாரமற்ற வீடு, கடைகளின் உரிமையாளர்கள் 294 பேருக்கு நோட்டீஸ்


டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: சுகாதாரமற்ற வீடு, கடைகளின் உரிமையாளர்கள் 294 பேருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:45 PM GMT (Updated: 25 Nov 2018 7:03 PM GMT)

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 மாதங்களில் சுகாதாரமற்ற வீடு, கடைகளின் உரிமையாளர்கள் 294 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

சேலம், 

சேலம் மாவட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் இடையே காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் இருக்கும் வீடுகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

இதையடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய டெங்கு கொசுக்கள், முறையாக மூடிவைக்கப்படாத நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆகிறது என்பதை தொடர்ச்சியாக, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் ஏற்படுத்திய பல்வேறு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையால், பள்ளி மாணவ, மாணவிகள் தற்போது முழுமையான விழிப்புணர்வை பெற்று, தங்களது வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் இருப்பவர்களுக்கு டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வை தெரிவிக்கின்றனர். இதனால் பெற்றோரும் அதற்கேற்ப தங்களது வீடுகளில் உள்ள தண்ணீரை முறையாக மூடி வைக்கிறார்கள். டீ கப், பாலீத்தின் பைகள், டயர்கள், பழைய பாத்திரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துகிறார்கள்.

இதைத்தொடர்ந்து சுகாதார குழுவினர் ஆய்வின் போது கொசுப்புழு வளர்ந்து இருந்த இடங்கள், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 3 மாதங்களில் சுகாதாரமற்ற வீடுகளின் உரிமையாளர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்டோர் என மொத்தம் 294 பேருக்கு டெங்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின்னரும் சம்பந்தப்பட்டவர்கள் சுகாதார நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story