குறிஞ்சிப்பாடியில்: விஷம் குடித்து பெண் தற்கொலை


குறிஞ்சிப்பாடியில்: விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Nov 2018 10:00 PM GMT (Updated: 26 Nov 2018 9:07 PM GMT)

குறிஞ்சிப்பாடியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி ராஜீவ்காந்தி நகர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(வயது 38). கடந்த வாரம் தாக்கிய கஜா புயலின் போது அண்ணா துரைக்கு சொந்தமான கூரை வீடு இடிந்து சேதமானது. இந்த வீட்டை சீரமைத்து தரக்கோரி அண்ணாதுரையிடம் சாந்தி பலமுறை வலியுறுத்தியும் அவர் சீரமைத்து கொடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் அண்ணாதுரை வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சாந்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story