துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம், வெள்ளி பொருட்கள் திருட்டு


துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம், வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 27 Nov 2018 9:45 PM GMT (Updated: 27 Nov 2018 6:53 PM GMT)

துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிராட்வே,

சென்னை சவுகார்பேட்டை நாட்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 48). இவர் தங்கசாலையில் உள்ள வணிக வளாகத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை கடையை திறக்க வந்த அவர் வெளிக்கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.1¼ லட்சம் மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இதுபற்றி யானைக்கவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் இரவு நேரங்களில் கண்காணிப்பு கேமராக்களை ‘ஆப்’ செய்து விடுவது வழக்கமாக இருந்துள்ளது.

இதனால் மர்மநபர்களை பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story