திருவாடானை அருகே முதியவர் மர்ம சாவு கொலை வழக்காக மாற்றம் - வாலிபர் கைது


திருவாடானை அருகே முதியவர் மர்ம சாவு கொலை வழக்காக மாற்றம் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2018 10:30 PM GMT (Updated: 28 Nov 2018 9:05 PM GMT)

திருவாடானை அருகே முதியவர் மர்ம சாவு வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள டி. நாகனி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கையா (வயது65). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்லையா மகன் ராஜாங்கம் (42) என்பவருக்கும் கடந்த 16.5.2017 அன்று நடைபெற்ற அய்யனார் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜாங்கம் தரப்பினர் சங்கையாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற சங்கையா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் இறந்த சங்கையாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கையா மகன் அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில்,பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவரின் உடலில் காயம் இருந்ததாகவும் அதனால் அவர் இறந்ததும் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக திருவாடானை அருகே உள்ள டி.நாகனி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன்கள் ராஜாங்கம் (42), செந்தில்(33), பஞ்சவர்ணம் மகன் சொக்கலிங்கம் (35), தேவகோட்டை அருகே சடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (38) மற்றும் வெள்ளைச்சாமி மகன் காளிமுத்து (52) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து சொக்கலிங்கம் என்பவரை கைது செய்தனர்.


Next Story