ராமேசுவரம் கடல் கண்காணிப்பு பணியில் மேலும் ஒரு அதிவேக கப்பல்


ராமேசுவரம் கடல் கண்காணிப்பு பணியில் மேலும் ஒரு அதிவேக கப்பல்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:30 PM GMT (Updated: 28 Nov 2018 9:27 PM GMT)

ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மேலும் ஒரு அதிவேக கப்பல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால், தமிழகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ராமேசுவரம் கடல் பகுதி விளங்குகிறது. மேலும் அவ்வப்போது ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலமாக கடத்தல்காரர்கள் கடல் அட்டை, பீடி பண்டல்கள், போதை பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர். அதேபோல் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கும் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்க ஏற்கனவே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பல் இரவு-பகலாக மண்டபம் முதல் பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கூடுதலாக ரோந்து பணியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான மேலும் ஒரு அதிவேக கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு கடந்த மாதம் புதிதாக வழங்கப்பட்ட இந்த சி-432 என்ற அதிவேக ரோந்து கப்பல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மண்டபம் முதல் பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி மற்றும் கீழக்கரை, ஏர்வாடி வரையிலான கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமும் சந்தேகப்படும்படியான படகுகளோ, நபர்களையோ கண்டால் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story