கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டனர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு


கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டனர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 1 Dec 2018 11:00 PM GMT (Updated: 1 Dec 2018 9:23 PM GMT)

கஜா புயல் பாதிப்பினால் விவசாயிகள் 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், சேந்தன்குடி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து நடமாடும் மருத்துவக்குழுவை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- புயலால் சேதமடைந்த அரசு பள்ளிகளை ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கிராமத்தில் புயல் பாதிக்கப்பட்ட போது அரசு கார்கள் எரிக்கப்பட்டது. அதனால் எங்களுக்கு கோபம் இல்லை. அதனால் வருத்தம் இருந்தது. அதற்காக இந்த கிராமத்தை தமிழக அரசு எந்த வகையிலும் புறக்கணிக்காது. கிடைக்க வேண்டிய அத்தனை நிவாரணங்களும் முழுமையாக கிடைக்கும். கொத்தமங்கலத்திற்காக மட்டும் மின்சாரப்பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 200 மின்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

புயலால் மாவட்டம் முழுவதும் 47 ஆயிரம் மின்கம்பங்கள் உடைந்துள்ளது. தற்போது கொத்தமங்கலத்திற்கு துணைமின் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். நிச்சயமாக நிறைவேற்றப்படும். கஜா புயல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டனர். அவர்களின் துயர் துடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படும். மேலும் அரசு நிர்வாகங்கள் முழுமையாக இந்த பகுதி மக்களுக்கு வந்து சேர்வதற்கு நடவடிக்கைகளை அரசு எடுக்கும். அனைத்து சேதமடைந்த பயிர்களையும் கணக் கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது பணிகள் முடிந்த பின்னால் அரசு நிதி பெற்று அவரவர் வங்கிக் கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என்றார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்கம்பங்கள் சீர் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது இன்று (நேற்று) வரை 75 சதவீதம் மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டு விட்டது. இரண்டு மூன்று நாட்களுக்குள் 100 சதவீதம் மின் இணைப்புகள் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும். அனைத்து நிவாரண பணிகளும் முழுமையாக செய்து முடித்த பின்னர்தான் நாங்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறுவோம் அதுவரை பணிகளை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story