டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை


டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2018 10:45 PM GMT (Updated: 2 Dec 2018 7:58 PM GMT)

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9-வது மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கார்த்திக், அஜய் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசினார். இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் அகஸ்டின், இந்திய ஜனநாயக சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜாங்கம். முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

நிரந்தர வேலை

மாநாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடற்ற கல்வி, வேலையில்லா இளைஞர்களுக்கும் பாதுகாப்பான வேலை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவ துறையை சீர்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

பெரம்பலூரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் விஜய்குமார் நன்றி கூறினார்.

Next Story