காஞ்சீபுரம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது மாமனார், மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


காஞ்சீபுரம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது மாமனார், மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Dec 2018 9:45 PM GMT (Updated: 3 Dec 2018 6:26 PM GMT)

காஞ்சீபுரம் அருகே மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய கணவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மாமனார், மாமியார், நாத்தனாரை தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த மாகரல் அருகே காவாம்பயிர் பகுதியில் வசிப்பவர் ஜீவானந்தம்(வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கீதா. இவரும் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

ஜீவானந்தத்துக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜீவானந்தம், குடிபோதையில் மனைவியை கையாலும், உருட்டுக்கட்டையாலும் சரமாரியாக தாக்கியதுடன், வெள்ளைத்தாளில் கையெழுத்து போடும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு மாமனார் ஆனந்தன், மாமியார் இன்பரசி, நாத்தனார் நர்மதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து கீதா அளித்த புகாரின்பேரில் மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் ஜீவானந்தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கீதாவின் மாமனார், மாமியார், நாத்தனார் ஆகிய 3 பேரையும் மாகரல் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story