நடத்தையில் சந்தேகம்: தீக்குளித்து பெண் தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்


நடத்தையில் சந்தேகம்: தீக்குளித்து பெண் தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:00 PM GMT (Updated: 3 Dec 2018 6:57 PM GMT)

நிலக்கோட்டை அருகே, நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 35). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், மதுரை மாவட்டம் பொதும்பு அருகே உள்ள பசிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துபாண்டியம்மாள் (29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளையன் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சுரேசை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் முத்துபாண்டியம்மாளுக்கு, சுரேஷ் அறிமுகமானார். இதையடுத்து முத்துபாண்டியம்மாளின் நடத்தையில் வெள்ளையன் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். தன்மீது கணவர் சந்தேகப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட முத்துபாண்டியம்மாள், உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர் அலறி துடித்தார்.

அலறல் சத்தம் கேட்டு வெள்ளையன் ஓடிவந்து மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பிடித்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கணவன், மனைவியை மீட்டு சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து வெள்ளையனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுகுறித்து முத்துபாண்டியம்மாளின் தந்தை வேடன், விளாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை வெள்ளையன், சுரேஷ் ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியதாக கூறியிருந்தார். அதன்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

Next Story