லாரி மோதி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி


லாரி மோதி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 3 Dec 2018 9:29 PM GMT)

படப்பையை அடுத்த சொரப்பனஞ்சேரி அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, இவரது மொபட் மீது மோதியது.

படப்பை,

சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த கன்னடபாளையம்-மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 33). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி மாங்குயில் (வயது 32). இவர், சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். இவர், நேற்று வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். படப்பையை அடுத்த சொரப்பனஞ்சேரி அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, இவரது மொபட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி லாரிக்கு அடியில் விழுந்த அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மாங்குயில், உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், பலியான மாங்குயில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், டிப்பர் லாரி டிரைவரான தாம்பரம் அடுத்த கடப்பேரி பர்மா காலனியை சேர்ந்த சீனிவாசன் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story