ஓமலூர் அருகே: பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு - கோவிலுக்கு சென்ற போது துணிகரம்


ஓமலூர் அருகே: பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு - கோவிலுக்கு சென்ற போது துணிகரம்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:15 PM GMT (Updated: 3 Dec 2018 11:34 PM GMT)

ஓமலூர் அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓமலூர், 

ஓமலூரை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருடைய மகள் ராஜராஜேஸ்வரி (வயது 22). இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை ஓமலூர் சந்தைபேட்டையில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது எதிரே ஹெல்மெட் அணிந்த படி மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வந்தனர். பின்னர் பின்புறம் உட்கார்ந்திருந்த ஆசாமி, திடீரென்று ராஜராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டார். அப்போது அவர் சத்தம் போட்டார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து அவர் ஓமலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பிறந்த நாள் அன்று கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று கடந்த வாரம் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடிக்கடி இந்த பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story