மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வர முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு


மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வர முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 4 Dec 2018 11:15 PM GMT (Updated: 4 Dec 2018 6:40 PM GMT)

மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் பிரதமர் மோடி எந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என திருச்சி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைத்து கட்சி தலைவர்கள் இங்கு கூடியிருப்பது அரசியலுக்காக இல்லை. 1957-ல் கருணாநிதி சொன்னதை போல உழவனின் கண்ணீரை துடைப்பதற்காக தான். கஜா புயலால் தமிழகம் ஏற்கனவே கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட போகும் செய்தி தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இயற்கையை யாரும் தடுத்திட முடியாது. ஆனால் செயற்கையான சதியை மத்தியில் இருக்கக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து கொண்டுள்ளது. இதை தமிழக மக்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை நான் எச்சரிக்கையோடு தெரிவிக்கிறேன்.

காவிரி ஆறு கர்நாடகத்தில் உற்பத்தியானாலும், தமிழகத்திலே தான் அதிகம் பாய்கிறது. இயற்கை கொடுத்த கொடையை தடுக்கும் பணியில், கர்நாடக அரசு தொடர்ந்து எல்லா வழிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு நிச்சயம் தண்ணீர் வராது.

2015-2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு அணை கட்ட முதல்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கிய நேரத்தில் சட்டமன்றத்தின் மூலமாக எதிர்த்தோம். நியாயமாக பா.ஜ.க. அரசு அப்போதே அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் என்று கேள்வியாவது கேட்டிருக்க வேண்டும். கர்நாடகத்தின் மீது அவர்களுக்கு அதிகமான பாசம். தமிழகத்திலே பா.ஜ.க. எந்த குட்டிக்கரணம் போட்டாலும் காலூன்ற முடியாது என்பது மோடிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால் தமிழகத்துக்கு அவர் ஓரவஞ்சனையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்திலே இப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. போர்க்குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக தூங்கி கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த பிறகாவது மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தடை பெறக்கூடிய புதிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து இருக்க வேண்டாமா?. தன்மீது போடப்பட்ட வழக்கு வரும்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று உடனடியாக தடை உத்தரவை பெறக்கூடிய எடப்பாடி பழனிசாமி, உழவர்களை நட்டாற்றில் விட்டிருக்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். அண்மையில் 8 மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்க குறைந்தபட்சம் 20 வருடங்கள் ஆகும்.

இதைப்போல் பேரிடர் வேறு எந்த மாநிலத்திலாவது நடந்திருந்தால் மோடி பறந்து போயிருப்பாரா? மாட்டாரா?. தமிழகத்துக்கு ஏன் இன்னும் வரவில்லை? வேறு மாநிலமாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான கோடி நிவாரணமாக வழங்கியிருப்பாரா? மாட்டாரா?.

ஏற்கனவே தமிழகத்தில் பலமுறை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்த பாதிப்பை பார்வையிட பிரதமர் வரவில்லை. முதல்-அமைச்சர் ஒப்புக்காக பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.

மாவட்ட அளவில் பேரிடர் ஆணையத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் இடம் பெறுகிறார்கள். ஆனால், உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. நடத்தாததால், பிரதிநிதிகள் இல்லாமல் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் யாரையும் அணுக முடியாத நிலை உள்ளது.

மத்திய அரசிடம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு சென்னை பெருவெள்ளத்துக்கு கேட்ட தொகை ரூ.25 ஆயிரத்து 912 கோடி, வர்தா புயலுக்கு ரூ.25 ஆயிரம் கோடி, ஒகி புயலுக்கு ரூ.9 ஆயிரத்து 300 கோடி. கஜா புயலுக்கு ரூ.14 ஆயிரத்து 910 கோடி.

ஆனால் இதுவரையிலே தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் ரூ.3 ஆயிரம் கோடி. அப்படியென்றால் இயற்கை பேரிடர் சட்டம் எதற்கு? தேசிய பேரிடர் பாதுகாப்பு பங்களிப்பு எதற்கு?. மத்திய அரசு அங்கிருந்து குழுவை அமைத்து ஆய்வு நடத்த ஏன் அவ்வளவு தாமதம்?. திட்ட கமிஷன் எதற்கு?. தமிழக மக்கள் இனியும் ஏன் மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும்?.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை தமிழ்நாட்டில் மலரும் என்கிறார்கள்?. புல்லே வராத போது தாமரை மலர்ந்திடுமா?. மேகதாது பிரச்சினையில் தமிழகத்தை மோடி வஞ்சிக்க நினைத்தால் இனி தமிழகத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அவர் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம். தமிழகம் காக்க, தஞ்சையை காப்போம். காவிரியை காக்க மேகதாதுவை தடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story