கஜா புயலால் விசைப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் மீனவர்கள் மனு


கஜா புயலால் விசைப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் மீனவர்கள் மனு
x
தினத்தந்தி 4 Dec 2018 11:00 PM GMT (Updated: 4 Dec 2018 7:10 PM GMT)

கஜா புயலால் விசைப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்க வேண்டும் என்று, அமைச்சர் ஜெயக்குமாரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்,

கஜா புயலில் சிக்கி நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் ஏராளமான விசைப்படகுகள், நாட்டு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன. புயலில் சிக்கி தூக்கி வீசப்பட்ட படகுகளை சில இடங்களில் மீனவர்கள் உதவியுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் கிரேன் மூலம் மீட்டு வருகிறார்கள்.

சேதமடைந்த படகுகளுக்கு அரசு வழங்கிய நிவாரணம் போதுமானதாக இல்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை, நாகை-காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் நாகை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை வைத்து தொழிலை மேற்கொள்ள முடியாது.

கஜா புயலால் முழுமையாக சேதமடைந்த பைபர் படகுக்கு ரூ.9 லட்சமும், பாதி சேதமடைந்த படகுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். விசைப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.60 லட்சமும், வலை மற்றும் தொழில்நுட்ப கருவிகளை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும். ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குள் கடல் நீர் உட்புகுந்து ஐஸ் தயாரிக்கும் மோட்டார்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான நிவாரணத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து, முழுவீச்சில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், இந்த கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story