வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Dec 2018 11:15 PM GMT (Updated: 4 Dec 2018 9:24 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முகமது இக்பால் (வயது 43). சைக்கிள் மெக்கானிக். இவர் கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அத்துடன் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது இக்பால் குடிபோதையில் வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டு வெளியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்து அவர் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகமது இக்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இக்பால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் சாகரா தாலுகா மருதூர் அருகே உள்ள கால்வேஹள்ளியைச் சேர்ந்தவர் தேவேந்திரா (23). இவர் ஓசூரில் சிப்காட் பேடரப்பள்ளியில் அண்ணா நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி முருகம்மாள் (42). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகம்மாள் இறந்தார். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story