சென்னையில் துருப்பிடித்த கார்களால் விபத்து அதிகரிக்க வாய்ப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்


சென்னையில் துருப்பிடித்த கார்களால் விபத்து அதிகரிக்க வாய்ப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:18 PM GMT)

சென்னையில் துருப்பிடித்த கார்களினால் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை, 

மும்பை ஐ.ஐ.டி.யும், இன்டர்நே‌ஷனல் ஷிங்க் அசோசியே‌ஷனும் இணைந்து துருப்பிடிக்கும் கார்களினால் ஏற்படும் விபத்து, எவ்வளவு கார்கள் துருப்பிடிக்காமல் சரியாக பராமரிக்கப்படுகிறது? என்பது குறித்து சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் சுமார் 500 கார்களை கொண்டு ஆய்வு நடத்தினார்கள். 

இந்த ஆய்வை மும்பை ஐ.ஐ.டி.யின் உலோகவியல் என்ஜினீயரிங் துறையின் முன்னாள் பேராசிரியர் ஆனந்த் கண்ணா, 2 ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து நடத்தி இருக்கிறார். ஒரு காரில் ‘சீட் பெல்ட்’, ‘ஏர் பேக்’ சரியாக இருக்கிறதா? என்று பார்ப்பது போல, கடலோர பகுதிகளில் பயன்படுத்தப்படும் காரும் துருப்பிடிக்காமல் இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு மூலம் எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால், சென்னையில் பயன்படுத்தப்படும் துருப்பிடித்த கார்களினால் விபத்துகள் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் இந்த ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக பேராசிரியர் ஆனந்த் கண்ணா தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:–

காரில் 50 சதவீதத்துக்கும் மேல் இரும்பு பயன்படுத்தப்படுகிறது. அது துருப்பிடிக்காமல் இருப்பதற்கு துத்தநாகம் பூச வேண்டும். வெளிநாடுகளில் இதை சரியாக செய்து இருக்கிறார்களா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. பெரும்பாலான கார் நிறுவனங்கள் அதை சரியாக பின்பற்றுவதும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story