வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி விபத்தை தவிர்த்த டிரைவர்கள்


வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி விபத்தை தவிர்த்த டிரைவர்கள்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:45 PM GMT)

வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்ததால் சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் விபத்தை தவிர்த்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி, வல்லத்திற்கு செல்லும் பஸ்களும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணத்திற்கும், கும்பகோணத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்களும் தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் இருந்து இடதுபுறமாக புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையின் மையப்பகுதியில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்றுஅதிகாலை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், மின்கம்பம் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதனால் மின்கம்பம் சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் வயர்களும் அறுந்து சாலையில் கிடந்தன. இந்தநிலையில் தஞ்சை மேலவீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாண்டுரெங்கன்(வயது50) நேற்றுஅதிகாலை 3 மணிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கேண்டீனுக்கு டீ கேனை எடுத்து கொண்டு ஆட்டோவில் சென்றார்.

சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தினர்

தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள மேம்பாலம் இறங்கும் பகுதியில் சென்றபோது, மின்கம்பம் சாலையில் விழுந்து கிடந்ததை பார்த்தார். உடனே ஆட்டோவை நிறுத்திவிட்டு, உடனே கட்டணமில்லா அவசர தொலைபேசி எண்: 100-யை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தார். மின்வாரிய அலுவலக தொலைபேசி எண் தெரியாததால் தனது நண்பரை தொடர்பு கொண்டு அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.

அவரும் ஆட்டோவில் விரைந்து வந்தார். 2 ஆட்டோக்களையும் சாலையின் மற்றொரு புறம் குறுக்கே நிறுத்திவிட்டு மற்றொரு புறம் நின்று அந்த வழியாக வந்த எல்லா வாகனங்களையும் மாற்றுப்பாதையில் 2 பேரும் திருப்பி விட்டனர். பின்னர் அந்த வழியாக வந்தவர்களிடம் இந்த தகவலை தெரிவித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினர். உடனே மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் மின்சாரம் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் மின்இணைப்பை ஊழியர்கள் துண்டித்துவிட்டு சாலையின் குறுக்கே கிடந்த மின்கம்பத்தை சாலையோரம் தூக்கி போட்டனர். கேபிள் வயர்களை எல்லாம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து காலை 7 மணிக்கு பிறகு அந்த சாலையின் வழியாக போக்குவரத்து தொடங்கியது. ஆட்டோ டிரைவர்களின் முயற்சியால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

Next Story