தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்; பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்; பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 8:13 PM GMT)

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள விவரத்தை மண்டல வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அரசாணைப்படி அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடத்தை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களை ஒவ்வொரு பள்ளியும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். இந்த இடங்களில் சேருவதற்கு ஒரே மாதிரியான விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டு, தகுதியானவர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அவ்வாறு பள்ளியில் சேரும் மாணவர்களின் வருகையை முறையாக கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் வேறுபாடு காட்டக்கூடாது. ஆனால் ஒருசில பள்ளிகளில் இந்த அரசாணை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. நடைமுறைப்படுத்தப்படும் சில பள்ளிகளிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் வகுப்பறையில் ஒரு ஓரத்தில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது போதிய கவனம் செலுத்துவதில்லை.

தனியார் பள்ளிகளில் இந்த அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் பல ஏழை மாணவர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடம் ஒதுக்காத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், இந்த அரசாணை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மேற்கண்ட அரசாணையை அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவரத்தை மண்டல வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வருகிற 20–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story