2-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை


2-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 9:15 PM GMT)

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர், அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன், அ.தி.மு.க. வினர் முன்னிலையில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கட்சியினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படம் தாங்கிய வாகனம் சென்றது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, ரோவர் ஆர்ச், பாலக்கரை ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜெயலலிதாவின் முழு உருவ சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் ஜெயலலிதா உருவப்படத்துடன் காமராஜர் திடலில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டனர். சத்திரம், பெரிய கடை தெரு, சின்ன கடை தெரு, தேரடி, மார்க்கெட் தெரு வழியாக அரியலூர் பஸ் நிலையத்தை ஊர்வலம் வந்தடைந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு கட்சியினர் முன்னிலையில் அரசுதலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story