வாரிய தலைவர்களும் நியமனம் செய்யப்படுவார்கள் கர்நாடக மந்திரிசபை 22-ந் தேதி விரிவாக்கம் சித்தராமையா அறிவிப்பு


வாரிய தலைவர்களும் நியமனம் செய்யப்படுவார்கள் கர்நாடக மந்திரிசபை 22-ந் தேதி விரிவாக்கம் சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:30 PM GMT (Updated: 5 Dec 2018 9:46 PM GMT)

வருகிற 22-ந் தேதி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா அறிவித்தார்.

பெங்களூரு, 

வருகிற 22-ந் தேதி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா அறிவித்தார்.

கூட்டணி ஒருங்கிணைப்பு குழு

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை சரியான முறையில் நடத்த வசதியாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதம் ஒரு முறை கூடி முக்கிய முடிவுகள், அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கிறது.

அந்த வகையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

நேரம் இல்லை

இதில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், ஜனதா தளம்(எஸ்) தேசிய பொதுச் செயலாளர் டேனிஷ் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெலகாவியில் 10-ந் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பு அதாவது 9-ந் தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இருந்தோம். ஆனால் தற்போது அதற்கு நேரம் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம்

அதனால் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு வருகிற 22-ந் தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுத்துள்ளோம். மந்திரிசபையில் காங்கிரசுக்கு 6 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 இடங்களும் காலியாக உள்ளன. அந்த இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் அன்றைய தினமே, வாரிய தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். காங்கிரஸ் சார்பில் 20 எம்.எல்.ஏ.க்களுக்கும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்படும்.

யாரும் விலக மாட்டார்கள்

எங்கள் கட்சியை விட்டு யாரும் விலக மாட்டார்கள். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள். ஊடகங்களில் தான் இதுபோல் செய்திகள் வருகின்றன. அதில் உண்மை இல்லை.

காங்கிரசை விட்டு விலகுவது இல்லை என்று சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. தெளிவாக கூறி இருக்கிறார். மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியும் விலக மாட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களும் விலக மாட்டார்கள்.

கனவு காண்கிறார்கள்

ஆபரேஷன் தாமரை மூலம் ஒரு முறை பா.ஜனதாவினர் ஆட்சி செய்தனர். அதே போல் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்று அக்கட்சியினர் கனவு காண்கிறார்கள்.

பா.ஜனதாவினரின் இந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Next Story