பல்லடம் அருகே பரபரப்பு: நூல் மில்லில் குழந்தையை பெற்றுபோட்டு விட்டு பெண் ஓட்டம்


பல்லடம் அருகே பரபரப்பு: நூல் மில்லில் குழந்தையை பெற்றுபோட்டு விட்டு பெண் ஓட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:15 PM GMT (Updated: 5 Dec 2018 10:07 PM GMT)

பல்லடம் அருகே நூல் மில்லில், குழந்தையை பெற்றுபோட்டு விட்டு பெண் ஓடி விட்டார். கள்ளக்காதலில் பிறந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காமநாயக்கன்பாளையம்.

பல்லடம் அருகே தனியார் நூல்மில்லில் கழிவறையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டது. அந்த பெண், பச்சிளம் குழந்தையை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை போட்டு விட்டு சென்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனியன் நிறுவனங்கள், நூல்மில்கள், விசைத்தறிகள் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அப்படி வேலை பார்க்கும் போது சில பெண்கள் சக தொழிலாளர்களுடனோ அல்லது வெளியில் உள்ள நபர்களுடனோ நெருங்கி பழகுவது வழக்கம். அப்படி பழகும்போது இளம் பெண்கள் கர்ப்பமாவதும் உண்டு. கர்ப்பமாகும் பெண்கள் குழந்தையை பெற்றெடுப்பது வரை ஒன்றும் தெரியாததுபோல அந்த நிறுவனங்களில் பணிபுரிவதும், குழந்தை பிறந்த உடன் அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடிப்பதும் வழக்கமான சம்பவமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பல்லடம் அருகே ஒரு நூல்மில்லில் தவறான நடத்தையால் கர்ப்பிணியான ஒரு பெண்ணுக்கு அங்குள்ள கழிவறையில் பிரசவம் நடந்தது. அதன்பின்னர் அந்த பெண் தனது பச்சிளம் பெண் குழந்தையை போட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள கேத்தனூரில் ஒரு தனியார் நூல்மில் உள்ளது. இந்த நூல்மில்லில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள விடுதியில் பெண்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அந்த மில்லில் வேலை பார்க்கும் ஒரு பெண் கழிவறைக்கு சென்றார். அங்கு அப்போது பிறந்த ஒரு பெண் குழந்தை ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்தது. தொப்புள் கொடியும் அறுந்து கிடந்தது. இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது அந்த குழந்தை உயிருடன் இருந்தது தெரியவந்தது.

உடனே அந்த பெண், மில்லில் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களிடமும், உயர் அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தார். உடனே மற்ற பெண்கள், கழிவறையில் கிடந்த அந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு மில் வளாகத்துக்கு கொண்டு வந்தனர். உடனடியாக இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:-

மில்லில் வேலை பார்க்கும் ஏதோ ஒரு பெண் தான் பச்சிளம் குழந்தையை பிரசவித்து உள்ளார். அவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறோம். வேலை முடிந்து சென்ற உள்ளூர் பெண்களில் ஒருவரா? அல்லது மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் பெண்களில் ஒருவரா? என்று விசாரிக்கிறோம். இந்த மில்லில் பணிபுரியும் பெண்கள் மேல்கோட்டு அணிந்து வேலை பார்த்ததால் யார் கர்ப்பிணி என்பது யாருக்கும் தெரியவில்லை. கள்ளக்காதல் காரணமாக கர்ப்பிணியான அந்த பெண், யாருக்கும் தெரியாமல் வேலை பார்த்து கொண்டே இருந்து இருக்கிறார். பிரசவ வலி ஏற்பட்டதும் கழிவறைக்கு சென்று பச்சிளம் குழந்தையை பிரசவித்து விட்டு தப்பி சென்று விட்டார். தப்பி ஓடிய அந்த பெண் யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பல்லடம் அருகே நூல்மில் கழிவறையில் குழந்தை பெற்று விட்டு தாய் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story