ஆங்கில புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக்க வேண்டும் மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


ஆங்கில புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக்க வேண்டும் மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 10:10 PM GMT)

ஆங்கில புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை, வடபழனியில் கடந்த ஆண்டு மே மாதம் தனியார் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்தனர். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி, சட்டவிரோத கட்டிடம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

கூடுதல் இழப்பீடு

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தவறு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 வாரத்துக் குள் முடித்து, அந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். தீ விபத்து நடந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை 2 வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில், போலீசார் தாக்கல் செய்யவேண்டும்.

தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் கூடுதலாக இழப்பீடு பெற்றுக்கொடுக்க, சென்னை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு உதவி செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

தூய்மை கடற்கரை

இதன்பின்னர், மெரினா கடற்கரை அசுத்தமாக உள்ளது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதிகள், ஆங்கில புத்தாண்டு பண்டிகைக்கு முன்னதாக மெரினா கடற்கரை முழுவதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் விதமாக ஒரு திட்டத்தை மாநகராட்சி உருவாக்கி செயலப்படுத்த வேண்டும்.

புத்தாண்டின்போது, மெரினா கடற்கரை தூய்மையானதாக இருக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story