அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் தருவதாக ரூ.19 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபர் சிக்கினார்


அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் தருவதாக ரூ.19 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 10:50 PM GMT)

அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் தருவதாக கூறி ரூ.19 கோடி வரை மோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் தருவதாக கூறி ரூ.19 கோடி வரை மோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் கைது செய்தனர்.

அடுக்குமாடி கட்டிடம்

தென்மும்பை நேப்பியன் சீ ரோடு பகுதியை சேர்ந்த கட்டுமான அதிபர் பிரகாஷ் மேத்தா (வயது 65). இவர் பிரபாதேவி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணியை தொடங்கினார். அந்த கட்டிடத்தில் வீடுகள் வாங்க பலர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பிரகாஷ் மேத்தா 2009-ம் ஆண்டு வீடுகளை ஒப்படைப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது வரையிலும் அவர் வீடுகளை ஒப்படைக்கவில்லை.

கட்டுமான அதிபர் கைது

இதனால் பணம் கொடுத்து வீடுகளை முன்பதிவு செய்திருந்தவர்கள் சந்தேகம் அடைந்து விசாரித்தனர். அப்போது, கட்டுமான அதிபர் பிரகாஷ் மேத்தா வேறு நபர்களுக்கு அந்த வீடுகளை விற்பனை செய்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், கட்டுமான அதிபர் பிரகாஷ் மேத்தா வீடு வாங்க முன்பதிவு செய்தவர்களிடம் ரூ.18 கோடியே 90 லட்சம் வரை வாங்கி மோசடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story