தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவுநேர தர்ணா போராட்டம் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்தது


தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவுநேர தர்ணா போராட்டம் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 5 Dec 2018 10:00 PM GMT (Updated: 5 Dec 2018 10:52 PM GMT)

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித்தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், ஆன்லைனில் சான்றிதழ் கொடுக்க இணையதள சேவை வழங்க வேண்டும், பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி அவர்கள் முதற்கட்டமாக ‘ஆன்லைனில்’ சான்றிதழ் வழங்கும் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் 350 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை அரசு நிறை வேற்றாவிட்டால் 5-ந் தேதி தாலுகா அலுவலகங்களில் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் இரவு நேர தர்ணா போராட்டம் நடந்தது. அதில் வேலூர் தாலுகா சங்க தலைவர் கனகராஜ் தலைமையில் 25 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் காட்பாடி தாலுகா சங்க செயலாளர் ஜோதீஸ்வரன் தலைமையில் 25 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், “20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகங்களில் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறை வேற்றா விட்டால் நாளை (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டமும், வருகிற 10-ந் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் நடைபெறும்” என்றனர்.

Next Story